வெணதுகினம்

சனி, 21 செப்டம்பர், 2024

ஆதி இராஜகுமாரன் (1)


(1)


 இராஜகுமாரன் என்னும் கவிஞன்

---------

மண்ணில் பாயும் வேர்கள் மரக்கிளையில் பூப்பதில்லை

 

 இந்த வரிகள் அதி இராஜகுமாரன் அவர்களின் ஒரு கவிதையின் தொடக்கம். இந்தக் கவிதை வரிகளே அவர் குறித்த தேடலை எனக்கு உருவாக்கித் தந்திருந்தது. அந்தக்

கவிதை வரிகளோடு இப்பதிவினை தொடங்குகிறேன்.

2010 இல் தைப்பிங் நகரில் நடந்த மழையருவி கவியரங்கம் நிகழ்ச்சியில் கோ.முனியாண்டி அவரது  உரையில் முதன் முதலாக இக்கவிதை வரிகளைச் செவிமெடுத்திருந்தேன். கவிக்கோ அப்துல் ரகுமானின் வரிகள் என்றே எண்ணியிருந்தேன். அந்த நிகழ்ச்சியில் அவர் ஆற்றிய உரையை கோ.முனியாண்டி அவர்கள் நயனத்தில் தொடராக எழுதியிருந்தார். இந்த வரிகள் தொட்டும்

எழுதியபோது தான் அவை இராஜகுமாரன் அவர்களின் எழுத்து என்பது தெரிய வந்தது.

மிக ஆழமான வரிகள்.

அவ்வரிகளை அவரின் இலக்கியச் செயல்பாடுகளைக் கோடிட்டுக் காட்டுவதாய் உணர்கிறேன். இலக்கியத்தில் அவர் பன்முகங்கள் கொண்டவராக திகழ்ந்தவர். நயனம் இதழியல்ஆசிரியராக தனித்து தனது முத்திரையைப் பதிப்பதற்கு முன் இராஜகுமாரன் என்ற கலைஞன்இலக்கியத்தில் பதித்த தடங்கள் வேறு. இலக்கிய நதியில் நடந்து அதன் தடத்தில் வெள்ளப் பெருக்கை உருவாக்கியவர். அந்த நதியில் பெருகெடுத்த படைப்பாளிகளைத் தாய்மை கனிவுடன் கண்டு

ரசித்தவர்.

வானம்பாடி, தமிழ் மலருக்கு அடுத்து அவரின் களமாக அமைந்தது தமிழ் ஓசையின் ஞாயிறு மலர்.

தொடர்ந்து வானம்பாடியைப் போன்றே ஞாயிறு ஆசிரியராக தமிழ் ஓசையிலும் அவர் செதுக்கிய

சாசனத்தின் வழி மலேசிய இலக்கியத்திற்குப் புதுச் சிந்தினை புரட்சியை மலரச் செய்தவர். நவீன

வித்துக்களை இம்மண்ணில் விதைத்தவர். அந்த எழுத்தில், எழுச்சியில் எழுத வந்தவர்கள் பலர்.

கதை,கவிதை, நாவல், விமர்சனம், அயல் இலக்கியத்தை அறிமுகப்படுத்துதல் என அவரின்

விரல்கள் இயங்கிக்கொண்டே இருந்தன. தமிழ் ஓசை பத்திரிகை அலுவலகத்தில் மாதம் ஒரு முறை

வளரும் எழுத்தாளர்களுக்கு சிறுகதை ,புதுக்கவிதை  கலந்துரையாட சந்திப்பு நிகழ்ச்சியை

தொடர்ந்து நடத்தி வந்துள்ளார். புது எழுத்தாளர்களைத் தட்டிக் கொடுக்கும் பண்பினையும் இலக்கிய

அக்கரையுடன் ஒரு படைப்பின் பலம் பலவீனங்களைச் [அது யாருடைய படைப்பாக இருந்த

போதிலும்] சுட்டும் துணிச்சலையும் அவர் கொண்டிருந்தார். நல்ல படைப்புகளையும்

படைப்பாளியையும் தயங்காது சாசனம் என்ற பக்கத்தில் அறிமுகப்படுத்தி அவர்களைப் பெருமைப் படுத்தினார்.

இந்நாட்டில் புதுக்கவிதை தீவிரமாக இயங்க தொடங்கிய காலத்தில் அப்போது மிக ஆர்வமாக

எழுதிக்கொண்டிருந்த கவிஞர்களுக்கும் புதியதாக எழுத வந்த கவிஞர்களுக்கும் அது பெரும்

உற்சாகத்தையும் உத்வே கத்தையும் தந்திருந்தது . என் ஈரம் தொகுப்பில் பெரும்பாலான கவிஞர்கள்

இதனை ஆவணப்படுத்தியிருப்பதை அறியலாம்.

 

அவர் எழுதிய சிறுகதைகள் அன்றைய சூழலில் தேங்கியிருந்த சிறுகதை இலக்கியத்திற்கு

புத்துணர்ச்சியை ஊட்டியது. அதன் முகத்தை திருத்தியெழுதியும் இருந்தது . குறிப்பாக தமிழ் ஓசை ஞாயிறு

மலரின் முத்திரைக் கதைகள் சிறுகதை இலக்கியத்திற்கு திருப்புமுனையாக அமைந்திருந்தது.

ஒருமுறை அவரின் சிறுகதை தொகுப்பைப் பிரதியெடுத்து எனக்கு தந்திருந்தார். அக்கதைகள் குறித்து

நீண்ட உரையாடல் எங்களுக்குள் நிகழ்ந்தது. அவரின் சிறுகதை ஒன்றை  எழுத்தாளர்  ஜி.

முருகனின் சிறுகதை ஒன்றுடன் ஒப்பிட்டுக் கருத்துரைத்திருந்தேன்.

தொடர்ந்து நீங்கள் சிறுகதைகள் எழுதியிருக்க வேண்டும் என்றபோது,

எனக்கு சிறுகதை எழுத வேண்டும் என்ற கனவெல்லாம் இல்லை. சிறுகதை எழுத வந்ததே இங்கு

எழுதப்படும் கதையின் முறையை பார்த்த எரிச்சலில் தான். இங்கு நடைமுறையில் இருந்த சிறுகதை

இலக்கணத்தை தூக்கி எறிந்துவிட்டே எழுதினேன் “, என்றார்.

ஆதி. இராஜகுமாரனின் இலக்கிய பணி என்ன என்பது அன்றைய அவரின் தீவிர வாசகர்கள்

அறிவார்கள். அவரின் சாசனத்தின் வீச்சை அறிந்தவர்களுக்கு அவரது பணி அளப்பரியது என்பது

நிச்சயம் தெரியும். அதன் மகத்துவத்தை அவரே அறிந்ததில்லை என்றே நினைக்கிறேன். பல

நினைவுகள் அப்போது அவரின் ஞாபகத்தில் இல்லை. அதனை வாசித்து நான் கருத்துரைத்தால் அப்படியா ?

எழுதியிருக்கலாம். இப்போது அவை என் ஞாபகத்தில் இல்லை என்பார் மிக இயல்பாக.

அவரின் இலக்கியப் பணிகளை முழுமையாக ஆய்வு செய்ய இவர் எழுதிய சாசனம் தொடர் ஒன்றே

போதுமானது. ஒவ்வொரு சாசனத்தின் வழி இராஜகுமாரன் அவர்களின் சிந்தனை முதிர்ச்சியும்

பொறுப்புணர்வும் வாசகனை இன்னொரு தளத்திற்கு அழைத்துச் சென்றுக்கொண்டிருந்தது .

ஒரு சாசனத்தில் அகாலமரணம் அடந்த . . இளஞ்சேகரன் என்ற ஓர் இளம் எழுத்தாளரைப் பற்றி

எழுதி, அவர் எழுதி முடிக்காத சிறுகதையைப் பிரசுரித்து அவருக்கு அஞ்சலி செய்திருக்கிறார்.

இன்னொரு சாசனத்தில் இளஞ்செல்வனின் நெருப்புப்பூக்கள்என்ற புதுக்கவிதை தொகுப்பைத்

திறனாய்வு செய்துள்ளார்

புதுக்கவிதை காட்டில் சடசடவென்று மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

முதலில் இளங்கோவனின் விழிச்சன்னல்களின் பின்னாலிருந்து’. அடுத்து நண்பர் இளஞ்செல்வனின்

நெருப்புப்பூக்கள்’. முன்னதை அரங்கேற்றம் செய்தேன். பின்னதை திறனாய்வு செய்கிறேன்.

புதுக்கவிதையின் சிறப்பு அம்சங்களில் ஒன்று அதைப் படித்து முடித்ததும் ஒரு மெல்லிய புன்னகைக்

கீற்று நம்மையறியாமலேயே உண்டாக வேண்டும்.’ என்று தொடங்குகின்றார்.

மரபுகவிதைகளில் எல்லா வரிகளும் சேர்ந்தது தான் கவிதை. புதுக்கவிதைகளிலோ ஒவ்வொரு

சொல்லும் கவிதை ‘ , என்று முடிக்கிறார்.

ஆதி. இராஜகுமாரனுக்குள் எப்போதும் ஒரு கவிஞர் வாழ்ந்துக்கொண்டிருந்தார். தனது வாழ்நாள்

முழுவதும் கவிதைகளை நேசித்தும் அதனை எழுதியும் வந்தவர். நயனம் இதழின் தீவிர வாசகி என்ற

முறையில் புனைபெயரில் அவர் எழுதிய சில கவிதைகளை வாசித்துள்ளேன். மழைச்சாரலில் என்ற புலனக்குழுவில் அவர்

இணைந்த பின் கவிதையின் பால் அவரின் நாட்டம் அதிகரித்தது. அவருக்குள் கவிதை ஊற்று

மீண்டும் பிரவாகமெடுத்தது. புலனத்தில் பகிரும் கவிதைகளை மிக ஆர்வமாக வாசித்து

சிலாகித்துப் பேசுவார். அது குறித்த அவரின் உரையாடல் நீளும். ‘நவீன கவிதைகளில் இருண்மை

அடர்ந்திருக்கிறது. அதனை முதல் வாசிப்பில் தரிக்க முடியவில்லை. மறு வாசிப்பிலும் இப்படியான

உரையாடலிலும் அதன் அழகை கண்டடைய முடிகிறது’ , என்பர்.

பொதுவாக உரையாடலில் முடிவில் சில கவிதை வரிகளுடன் விடை பெறுவார்.கவிதைகள்

தோன்றும் சமையத்தில் எல்லாம் எழுதிக்கொண்டே இருப்பார் . முடிந்தால் இந்தக் கவிதைகள்

முழுவதும் தொகுக்க வேண்டும் என்பார். அவரின் இறுதிக்காலக் கவிதைகளுடன் பயணிக்க

எனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பெரும் பேறாக கருதுகிறேன்.

 

அளந்து பேச

முடிவு கட்டிய

ஒவ்வொரு முறையும்

பற்களைத் தாண்டி

நாக்கு முன் வந்து விடுகிறது

வலி நாக்குக்கு

மட்டுமல்ல

இதயத்துக்கும் தான்!

கண்ணீரையும்

ரத்தத்தையும்

வேறு எப்படி

கொட்டி

ஓவியம் திட்ட

முடியும்!

                                                                                  ******

 

மழையும்
காற்றும்
பூக்களும்
தரமுடியாத
கனிவு
எப்படி, யார்
தந்தது!
*****
 
மெல்ல மழை
பொழிந்து
பூமி காய்ந்தது
வானம் இருண்டு
வெளிச்சம்
திரண்டது
குருவி குஞ்சுகளும்
பல்லி ஓணான்களும்
நாய் பூனைகளும்
ஓட்டம் நின்றன.
------
 
மழை எப்போது கொட்டும்
மௌனம்
எப்போதுகலையும்!
*****
 
நானும்
குழந்தையாகவே
தவழ்கிறேன்
மடி தேடி!
எந்த மடி
இறக்கிவிட்டது
என்னை
எந்த மடி
ஏற்றிக் கொள்ளும்
என்னை!
இருட்டில்
வழி தெரியாது
மிதக்கும்
என்னை எந்த
நட்சத்திரம்
ஏந்திக் கொள்ளும்!
******
 
உண்மை 
என்பது
பொய்யின்
தொடக்கம்
அவசியமில்லா 
உண்மைகள்
அவசியமான
பொய்கள்.
 
****
மனம்
கனத்து
தடுமாறுகிறது
ஒரு பாறையின்
சுமை
சில கணங்களில்
ஒரு கவிதையின்
கனம்
சில விநாடிகளில்
ஒரு சொல்லின்
கனம்
சில அர்த்தங்களில்
உன் கண்ணீர்த்
துளிகளின்
பளுவைத்
தாங்க முடியாமல்
 
தனிமையிலும் எதிலும் பற்றில்லாமலும் அவர் வாழ்ந்திருந்த தருணங்களில் அவருக்கு மிக
நெருக்கமாக இருந்தது கவிதைகளே. குறைந்தது சில வரிகளையாவது அவரின் கவித்துவம்
வெளிப்பட்டு விடும். தனது உணர்வுகளை கவிதைகளில் இறக்கி வைப்பதையே விரும்பினார்.
எனக்கு எப்போதும் கவிதைகள் தான் போங்கள்என்று சலிப்பும் மகிழ்ச்சியுமாக கூறுவார்.
இராஜகுமாரன் அவர்கள் கவிதைகளோடு தான் வாழ்ந்தார் என்பதற்கு இன்னொரு சான்று நோய்
வாய்ப்பட்டிருந்த தருணங்களிலும் அவர் இயற்றிய கவிதைகள்….
 
நான்
தூங்காதபோது
தொடர்ந்த
இரவுகள்
நான்
தூங்கியபோது
விடிந்தன.
-26/05/2018 
 
ஆம்புலன்ஸ்
நினைவில்லாமல் பழகி
அவசரப்பிரிவு
தாண்டி
வார்டில் வசப்பட்டு
பேம்பர்ஸோடு
தூங்கி 
அரை மணி 
ஒரு மணிக்கு
ஒரு தடவை
வலியோடு
சிறுநீர் வந்து எழுப்ப
தூங்கி விழித்து
தூங்கும்போது
நான்கு மணிக்கு 
நர்சுகள் வந்து
எழுப்பி நான்
நாணம் இழக்க
ஏழு மணிக்கு இன்சுலின் போட
இனிதே கழிகிறது பொழுது
அதே நிலையில்.

01/06/2018

 

இராஜகுமாரன் அவர்கள் மருத்துவமனையில் இருந்த சில சமயம் அலைபேசியை பயன் படுத்தாதிருந்தார்

. அவர் நலம் குறித்து  அவரின் மகள் தாராவிடம் விசாரித்து விட்டு, குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி இதனை

'சாருக்கு' படித்துக் காட்டுங்கள்என்றேன்.

 

//எங்கள் கானகத்து

தேவவிருதன்

அம்புப் படுக்கையில்

வழியறியாத

இந்த ஆட்டுக்குட்டி

இனி எங்குச் செல்லும்?//

 

அவரின்  தாரா அதனை வாசித்துக் காட்டியதும் உடனே அதற்கான பதிலை தாராவிடம் சொல்லி அதனை

எனக்கு அனுப்பச் சொல்லியிருந்தார். பதில் இப்படி அமைந்திருந்தது.

 

//யுத்தம் முடிந்தது

காப்பற்றப் பட்டுவிட்டேன்!

-தேவவிருதன்//

 

தாரா என்னை அழைத்து அதனைச் வாசித்து காட்டினார் . இப்படி கவிதையுடன் தன்னைப்

பிணைத்துக் கொண்டிருந்தார்.

கவிதையாகவே வாழ்ந்த அவரின் மனம் மரணத்தை எதிர்கொண்ட போது எந்தக் கவிதையில் தமது

கடைசி மூச்சியை நிறுத்திருக்கும்..?

 

-வாணிஜெயம்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக